தலதா மாளிகைக்குச் சென்று ஆசி பெற்றார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று சென்று சமயக்கிரியைகளில் ஈடுபட்டார்.
தலதா மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி, கண்டி நகரபிதா கேசர சேனநாயக்க மற்றும் அமைச்சர்களால் வரவேற்கப்பட்டு தலதா மாளிகையின் பிரதான நுழைவாயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஜனாதிபதியை தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல மற்றும் நான்கு மகா தேவாலய பஸ்நாயக்க நிலமேமார் வரவேற்றனர்.
அதன்பின்னர், தலதா மாளிகையில் புனித தந்ததாது பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மேல்மாடிக்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு சமய வழிபாடுகளில் ஈடுபட்டு மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
சமய வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஜனாதிபதி, தலதா மாளிகையில் சிறப்பு விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்துக்குக்குச் சென்று நினைவுக் குறிப்பேட்டில் நினைவுக் குறிப்பொன்றை இட்டார்.
இதன்போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, திலும் அமுனுகம, குணதிலக ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதி ஆலோசகருமான ருவன் விஜயவர்தன, ஐ.தே.க. பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ஐக்கிய லக் வனிதா. முன்னணியின் தலைவி சாந்தினி கோன்கஹகே, கம்பளை நகர பிதா சமந்த அநுரகுமார உள்ளிட்ட கண்டி மாவட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.