யாழ். பல்கலை மாணவிகளுடன் ஆபாசமாக உரையாடல்! – பொலிஸில் முறைப்பாடு.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவிகளுக்குத் தொலைபேசியில் அழைப்பெடுத்து ஆபாசமாக உரையாடும் இனந்தெரியாத நபர் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
0742345913 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து அண்மையில் அழைப்பு மேற்கொண்டு ஆபாசமான முறையில் பேசியதாக மாணவிகளின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வேறு தொலைபேசி இலக்கங்களிலிருந்தும் தொடர்ச்சியாக இவ்வாறான அழைப்புக்கள் பல்கலைக்கழக மாணவிகளுக்கு வருகின்றன எனவும், அவர்கள் மிரட்டப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை என்று மாணவிகள் தரப்பில் ஆதங்கம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பொலிஸ் முறைப்பாடு மேற்கொள்ளும் சூழல் உருவானது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.