நல்லூர் தேர் உற்சவத்தில் 30 பவுண் நகை திருட்டு! – 4 பெண்கள் உட்பட ஐவர் சிக்கினர்.

யாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர் உற்சவத்தில் மாத்திரம் 30 பவுண் நகை திருடப்பட்டுள்ளன என்று முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒரு சிறுவன் மற்றும் 4 பெண்கள் உட்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளின் பின்னர் நல்லூர் கந்தனின் தேர்ப் பவனி நேற்று இடம்பெற்றது. இதனால் அதிகளவான பக்தர்கள் ஆலயத்துக்கு வருகை தந்திருந்தனர். சன நெரிசலை சாதகமாக்கிய திருடர்கள் தங்கள் கைங்கரியத்தைக் காட்டினர். 2 தாலிக் கொடி மற்றும் சங்கிலிகள் உள்பட 30 பவுண் நகைகள் களவாடப்பட்டன என்று நல்லூர் உற்சவகால பொலிஸ் காவலரணில் 7 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நீர்கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவர் சங்கிலி அறுக்க முற்பட்டபோது கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நீர்கொழும்பைச் சேர்ந்த மேலும் 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பொலிஸாரின் விசேட தேடுதல் நடவடிக்கையின்போது கோப்பாயைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவனும் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளான்.

Leave A Reply

Your email address will not be published.