யூட்யூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

“நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது” என யூடியூப் சேனலில் நீதித்துறை குறித்து அவதூறாக பேட்டி கொடுத்த வழக்கில், சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது உயர்நீதிமன்றம் மதுரை கிளை.
சென்னை உயர்திமன்ற நீதிபதி G.R.சுவாமிநாதன் குறித்து, அவதூறாக சமூகவலைதளத்தில் பதிவு செய்ததாக, யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது உயர் நீதிமன்றம் மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில், ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் அளித்த பேட்டி ஒன்றில், “உயர் நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது” என கூறியிருந்தார்.
இது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்ற விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் செப்டம்பர் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான சவுக்கு சங்கர், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரினார். இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 8 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
அதில், ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஒட்டு மொத்த நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது என பேட்டி கொடுத்தீர்கள். மேலும் பல பேட்டி மற்றும் பதிவுகளில், சென்னை உயர் நீதிமன்றம், சில நீதிபதிகளின் பரம்பரை சொத்து என பாவித்து செயல்படுகின்றனர், சில நீதிபதிகளுக்கு ஒன்று கூட தெரியவில்லை, ஒரு வழக்கில், மூத்த வழக்கறிஞர் ஆஜராகிறார், அவரே, தீர்ப்பையும் எழுதுகிறார், என நீதி துறை குறித்தும், நீதிபதிகள் குறித்தும் அவதூறாக பேசி உள்ளீர்கள் என கூறினர்.
இதற்கு பதிலளித்த சவுக்கு சங்கர் தனக்கு இது குறித்து பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரினார். இதனை ஏற்று வழக்கின் விசாரணை செப்டமபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், யூட்யூபர் சவுக்கு சங்கர் மீதான இந்த குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கில், அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் G.R.சுவாமிநாதன், B.புகழேந்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் நீதிமன்றம் குறித்து பேசிய பதிவுகளை நீக்க மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் டிவிட்டர் மற்றும் கூகுள் நிறுவனங்கள், அக்டோபர் 14ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.