இலங்கைக் குடிமக்களாக சகலருக்கும் சம உரிமையே – ஜனாதிபதி ரணில் உறுதி.

“இலங்கை ஜனநாயக நாடு. இங்கு வாழும் சகல இனத்தவர்களுக்கும், அனைத்து மதத்தவர்களுக்கும் சம உரிமைகள் கிடைத்தே ஆக வேண்டும். எனவே, நாட்டில் இன ரீதியில், மத ரீதியில் எழுந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சகல தரப்பினருடனும் சுமுகமாகப் பேசி விரைவில் தீர்வு காண்போம்.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
குருந்தூர் மலை விவகாரம் மற்றும் திருக்கோணேஸ்வரம் விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் இடையில் எழுந்துள்ள கருத்து மோதல்கள் தொடர்பில் கருத்துரைக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இனவாத, மதவாத ரீதியில் கருத்துக்களை வெளியிடுவோர் நாட்டின் இன நல்லிணக்கத்தையும் மத நல்லிணக்கத்தையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு இனத்தவர்களும் தங்களுக்குரிய முழுமையான உரிமைகளைக் கோரி நிற்பார்கள். அதேவேளை, ஒவ்வொரு மதத்தவர்களும் தங்கள் மத உரிமைகளை விட்டுக்கொடுக்கமாட்டார்கள்.
எனவே, இன, மத ரீதியில் எழும் பிரச்சினைகளுக்குப் பேச்சு மூலமே தீர்வுகாண வேண்டும். அதைவிடுத்து இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு பிரச்சினைகளைப் பெரிதுபடுத்த எந்தத் தரப்பினரும் முயலக்கூடாது” – என்றார்.