வல்வெட்டித்துறையில் லொஹான் ரத்வத்தயை நோக்கிப் பாய்ந்த நாய் மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக்கொலை!

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறைப் பகுதிக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனிப்பட்ட விஜயம் மேற்கொண்ட போது அவரது மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி நாய் ஒன்று உயிரிழந்துள்ளது.
யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்திருந்த இராஜாங்க அமைச்சர் தனது நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக வல்வெட்டித்துறைக்குச் சென்றிருக்கின்றார்.
அங்கு வளர்ப்பு நாய் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயைக் கண்டதும் குரைத்ததுடன் அவரை நோக்கிப் பாய்ந்துள்ளது.
அதன்போது இராஜங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர் அந்த நாய் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான குறித்த நாய் உயிரிழந்துள்ளது.
இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மெய்ப்பாதுகாவலர் இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகின்றது.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்குத் தகவல் வழங்க பொலிஸார் மறுத்தனர்.