வௌவால்களுக்காக 100 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராமம்

சீர்காழி அருகே 100 ஆண்டுகளை கடந்து வௌவால்களை பாதுகாப்பதற்காக தீபாவளி அன்று வெடி வெடிக்காத கிராம மக்கள். சரணாலயம் மற்றும் சாலை வசதி அமைத்து தர கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விவசாயம் நிறைந்த கிராமமாக பெரம்பூர் கிராமம் விளங்குகிறது. இக்கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆல மரத்தில் பல்லாயிரக்கணக்கான வௌவால்கள் வாழ்ந்து வருகின்றன .கிராமத்தின் நடுவே வயல்வெளியில் அமைந்துள்ள ஆலமரத்தில் வௌவால்கள் வசிப்பதால் இப்பகுதியை வௌவாலடி எனவும் அழைக்கின்றனர்.
இந்த வௌவால்கள் வசிக்கும் பகுதிக்கு கிராம மக்கள் அனுமதியின்றி, வெளிநபர்கள் யாரும் செல்ல முடியாது. வௌவால்களை பாதுகாக்க இளைஞர்கள் கொண்ட ‘வேட்டை தடுப்பு குழு’ ஒன்றை அமைத்து மூன்று தலைமுறைகளாக வௌவால்களை பாதுகாத்து வருகின்றனர்.
பெரம்பூர் கிராம மக்கள் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிப்பதையும் தடை செய்துள்ளனர். பட்டாசு சத்தத்தால் வௌவால்கள் அச்சமடையும் என்பதால் இந்த கட்டுப்பாடு பல ஆண்டுகளாக உள்ளது. வழக்கம் போல் இந்த ஆண்டும் வௌவால்களுக்காக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி பண்டிகையை கொண்டாட கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
வௌவால்களை தங்கள் கிராமத்தை காக்கும் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை பட்டாசு வெடிக்க ஆசைபட்டால் கூட அருகில் உள்ள மற்ற கிராமங்களுக்கு சென்று வயல் பகுதியில்தான் வெடிக்க வேண்டும் எனவும் பெரம்பூர் கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்.
இக்கிராமத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலிய நாட்டு பறவை இனங்களான வக்கா,பூ நாரை, நீர் காக்கா, வெள்ளை காக்கா உள்ளிட்டவை இக்கிராமத்துக்கு வர தொடங்கியது. அக்டோபர் மாதம் வரும் பறவைகள் மார்ச் மாதம் வரை தங்கி இனப்பெருக்கத்திற்கு பின் தன் குஞ்சுகளுடன் தாயகம் திரும்புவது வழக்கம். ஆனால் பெரம்பூர் கிராமத்தின் பசுமை சூழலால் கவரப்பட்ட பறவைகள் தற்போது அங்கேயே நிரந்தரமாக கூடுகள் அமைத்து தங்கிவிட்டது.
ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மரங்களில் நூற்றுக்கணக்கில் பறவைகள் தங்கியுள்ளது. தற்போது வயல்வெளிகளில் ஆயிரக்கணக்கான பறவைகள் உலா வருவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இப்பறவைகளை பாதுகாக்க இப்பகுதியில் ஒரு சரணாலயம் அமைக்க வேண்டும்,சாலை வசதிகள் செய்து தர வேண்டும் என அரசுக்கு பெரம்பூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.