இந்தியாவும் இலங்கையும் நாணயத்தின் இரு பக்கங்கள்! – தூதுவர் முன்னிலையில் ரணில் சுட்டிக்காட்டு.

தீபாவளி இந்தியா-இலங்கை ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரு கொண்டாட்டம் என்று ஜனாதிபதி தெரிவிப்பு

“கலாசார மற்றும் மத ரீதியிலான சில வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியாவும் இலங்கையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அந்த ஒற்றுமைகள் பிரதிபலிக்கும் சந்தர்ப்பங்களில் தீபாவளியும் ஒன்று என்றும், அது இன்று முழு உலகமும் கொண்டாடும் பண்டிகையாக மாறியுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நேற்று (29) மாலை கொழும்பு எக்ஸ்பட்ஸ் கலாசார சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட தீபாவளி கொண்டாட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

தீபாவளி என்பது அனைவரையும் ஒன்றிணைக்கும் மற்றும் நெருங்கியவர்களை சந்திக்கும் ஒரு சந்தர்ப்பம் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, ஐக்கியத்தையும் ஒத்துழைப்பையும் குறிக்கும் வகையில் தீபாவளி கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தமைக்காக கொழும்பு வெளிநாட்டு கலாசார சங்கத்துக்கு நன்றியம் தெரிவித்தார்.

கொரோனாத் தொற்று நோய் காரணமாக இலங்கை பொருளாதார ரீதியாக சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில், பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் வாழ்க்கையைப் பிரகாசமாக்குவதற்கு கலாசார சங்கம் ஆற்றிவரும் பங்களிப்பையும் ஜனாதிபதி பாராட்டினார்.

சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கொழும்பு வெளிநாட்டு கலாசார சங்கத்தின் தலைவர் கப்டன் ஏ. பேனர்ஜி மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.