உக்ரைனில் போரை நிறுத்துவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும்.

இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.
மாநாட்டில் பங்கேற்க பாலிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ வரவேற்றார். இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த பிரதமர், கை குலுக்கிக்கொண்டனர். மேலும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனையும் சந்தித்த பிரதமர் மோடி, சிறிது நேரம் கலந்துரையாடினார்.
இந்நிலையில் ஜி20 மாநாட்டில் இன்று உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்த அமர்வில் பிரதமர் மோடி பேசியதாவது:- பருவ நிலை மாற்றம், கொரோனா தொற்றுநோய், உக்ரைன் போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய உலகளாவிய பிரச்சனைகள் ஆகியவை உலகில் அழிவை ஏற்படுத்தியுள்ளன. மேலும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் சிக்கலில் உள்ளன. உணவு மற்றும் உரங்களைப் பொருத்தவரை போதுமான விநியோகச் சங்கிலிகளை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
உக்ரைன் மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டும். உக்ரைனில் போர்நிறுத்தம் மற்றும் இராஜதந்திர பாதைக்குத் திரும்புவதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் பலமுறை கூறியுள்ளேன். கடந்த நூற்றாண்டில், இரண்டாம் உலகப் போர் உலகில் பேரழிவை ஏற்படுத்தியது.
அதன் பிறகு அக்காலத் தலைவர்கள் அமைதி நிலவ தீவிர முயற்சி மேற்கொண்டனர். இப்போது நமது முறை. கொரோனா காலத்திற்குப் பிந்தைய காலத்திற்கு ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.